ரோட்டுக்கடைகளை அள்ளிச் சாப்பிட்ட அம்மா கேண்டீன்: அலைமோதும் மக்கள்... அதிகரிக்கும் வருவாய்
சென்னை: அம்மா கேண்டீனின் வருகையால் ரோட்டுக் கடைகளின் வியாபாரம் வெகுவாக பாதித்துள்ளதாம். அலைமோதும் வாடிக்கையாளர்களால் தினமும் வருவாய் கூடி வருகிறதாம்.
அதிலும் குறிப்பாக, காலையில் பொங்கல் போட ஆரம்பித்த பிறகு சூடு பிடித்துள்ளது வியாபாரம். அருகில் வசிப்போர், குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்போர் மட்டுமின்றி சுவை மற்றும் தரத்தினால் பலதரப்பட்ட மக்களும் அம்மா கேண்டீன் ரசிகர்களாகி விட்டதென்னவோ உண்மைதான்.
விடுமுறையில் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் திறப்பிற்குப் பிறகு இன்னும் வியாபாரம் அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
200 அம்மா கேண்டீன்கள்...
சென்னை மாநகராட்சி சார்பில், 200 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைத்த வருவாய், தற்போது புதிய மெனுவால் ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
அமோக ஆதரவு...
குறைந்த விலையில் தரமான உணவு தரப்படுவதால், அம்மா உணவக வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக கணக்கெடுப்பு சொல்கிறது..
இட்லியை சாப்பிட்ட பொங்கல்....
முன்பெல்லாம் தினமும் 3 லட்சம் விற்பனையாகி வந்த இட்லி விற்பனை, பொங்கலின் வருகையால் தடாலடியாக 2.5 லட்சமாக குறைந்துள்ளதாம். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் பொங்கல் விற்பனை ஆகிறதாம்.
ஒரு லட்சம் சாதம் விற்பனை...
நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் சாத வகைகள் விற்பனையாகிறதாம். அதில், தயிர் சாதம் 20 ஆயிரமும், சாம்பார் சாதம் 40 ஆயிரமும், கறிவேப்பிலை சாதம் 18 ஆயிரம்.
சிறு கடைகளுக்கு பாதிப்பு...
முதல் கட்டமாக இட்லி மட்டும் விற்பனை செய்யப்பட்டதை விட தற்போது பொங்கலும் சேர்ந்த பிறகு சிறு கடைகள், தள்ளு வண்டி கடைகளில் வியாபாரம் செய்பவர்களின் நிலை'அந்தோ பரிதாபம்' ஆனது என்னவோ உண்மைதான்.
3 மடங்கு குறைவு...
ரூ 15 முதல் ரூ20 வரை சிறு ஓட்டல்களில் பொங்கல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மா உணவகங்களிலோ பொங்கல் வெறும் ரூ.5 தான்.
சப்பாத்தி வந்தால்...
சப்பாத்தி அறிமுகம் படுத்தப்பட்டால் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என அச்சம் நிலவுகிறது சிறு வியாபாரிகள் மத்தியில்.
விரிவு படுத்துதல்...
அம்மா உணவகம் தனது கிளைகளை விரித்து வருகிறது.விரைவில், 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் தொடங்கப்பட இருக்கிறது என்பது குரிப்பிடத்தக்கது..