மணிப்பூர் மோரேவில் தமிழர் கோவில் நிலத்தையும் உரிமை கோருகிறது மியான்மர் அரசு!
மோரே: மணிப்பூர் மாநிலத்தின் எல்லை நகரான மோரேவில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வரும் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலத்தையும் தங்களது நிலப்பரப்பு என மியான்மர் அரசு உரிமை கோரி இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
மோரே நகரம் பர்மா எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பல்லாயிரம் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தமிழர்கள் மட்டுமின்றி மணிப்பூர் மாநிலத்தவரும் சாதி, மதம், இனம் கடந்து வழிபாடு நடத்தி வரும் ஆலயம் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் தீ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோயிலை ஒட்டி ஒரு மண் சாலை செல்கிறது. இந்த மண் சாலையின் மறுமுனைதான் பர்மா. ஆனால் அந்த பகுதியிலும் கூட தமிழர்கள் கட்டிய கோயில் கேட்பாரற்றே கிடக்கிறது. அதாவது முன்பு இந்திய எல்லைப் பகுதி விரிந்திருந்தது. அப்போது அங்கு கோயில் கட்டப்பட்டு வழிபாடும் நடத்தப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல மோரே நகரை நெருக்கிக் கொண்டே மியான்மர் ராணுவத்தினர் கோயிலின் ஒரு பகுதியை கபளீகரம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் இந்தியா-மியான்மர் இணைந்து ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை அமைக்கு பணியை மேற்கொண்டு வந்தனர். அதே நேரத்தில் மோரே நகரின் மேலும் தமிழர் கோயில் நிலம் உள்ளிட்ட சில பகுதிகளையும் மியான்மர் அரசு தமக்கு உரித்தானது என உரிமை கோரி உள்ளது. மோரே நகருக்கு நேற்று சென்றிருந்த புதிய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி சோதனைச் சாவடி மற்றும் மியான்மர் அரசு உரிமை கோரும் இந்திய பகுதிகளைப் பார்வையிட்டார். தற்போது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.