”கொல்லைப் புறவாசல்”எம்.பி.அன்புமணியிடம் அதே புறவாசல் தேர்தலுக்காக கையேந்திய மு.க.ஸ்டாலின்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதைவிட தமிழகத்தில் அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திமுகவை அதுபடுத்தியிருக்கும் பாடு இருக்கிறதே நிச்சயம் வரலாற்றில் இடம்பெற்றே தீரும்!
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக அணியில் தொடக்கத்தில் குழப்பம் இருந்தாலும்கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அரவணைத்துக் கொண்டது. இதனால் அதிமுக அணி கெத்தாக இருக்கிறது. ஆனால் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகவும் 22 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிகவும் ஒன்றிணைய முடியாமல் போனது சோகமே.
தேமுதிகவிடம் கெஞ்சல்
23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக, வேறுவழியின்றி நேற்று முளைத்த காளானாகிய தேமுதிகவிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் இத்தனைக்கும் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்துதான் 29 எம்.எல்.ஏக்களை விஜயகாந்த் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 29 பேரில் 7 பேர் அதிமுக பக்கம் போய்விட்ட நிலையில் 22 எம்.எல்.ஏக்கள் தற்போது விஜயகாந்திடம் இருக்கின்றனர்.
ஆனால் 22 தேமுதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் பெற முடியாமல் போனதால் மிகவும் ஒரு மோசமான நிலைக்கு திமுக தள்ளப்பட்டது. அதாவது எந்தெந்த கட்சிகள் எல்லாம் வேண்டியதில்லை.. சுமை குறைந்து போய்விட்டது.. என உதைத்து திமுக வெளியே அனுப்பியதோ விமர்சித்ததோ அந்த கட்சிகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலைக்குப் போனது!
புறவாசல் எம்.பி. அன்புமணி- அன்று ஸ்டாலின்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணியை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கோரியிருக்கிறார்.. எதற்காக தமது தங்கை கனிமொழியை ராஜ்யசபா எம்.பி.யாக்குவதற்காக! இதே மு.க.ஸ்டாலின்தான் அன்புமணியை, கொல்லைப்புற வாசல் வழியாக எம்.பியானவர் என விமர்சித்திருந்தார்.
”மாமா.. மாமா.. நீங்க எந்த வாசல் பக்கமா போனீங்க”- அன்று அன்புமணி
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக 2009-ம் ஆண்டு அன்புமணி சொன்ன பதில் இதுதான் "ஸ்டாலின்னு ஒருத்தரு என்னை குறை சொல்றாரு. நாடாளுமன்றத்துக்கு நான் கொல்லைப் புற வாசல் வழியா (ராஜ்யசபா) நுழைஞ்சிட்டேன்னு சொல்றாரு. உன் தங்கச்சி (கனிமொழி) எந்த வாசல் வழியாப்பா நாடாளுமன்றத்துக்கு வந்துச்சு.. தெரு வாசல் வழியாவா?. உங்க மாமா (முரசொலி மாறன்) 30 வருசமா எந்த வாசல் வழியாப்பா போனாரு.. தெரு வாசல் வழியாவா கொல்லைப் பக்கமாவா?. அப்ப நீ அவருகிட்ட கேட்டியா. மாமா.. மாமா.. நீங்க எந்த வாசல் பக்கமா போனீங்கன்னு கேட்டியா?. இதே கேள்விய பிரதமர் கிட்ட கேக்க உனக்கு தைரியம் இருக்காப்பா.. " என்று சாடியிருந்தார்.
இன்று அதே கொல்லைப் புறவாசல் வழிக்காக அன்புமணியிடம் கெஞ்சி நிற்கிறது திமுக! என்ன கொடுமை!!
தூக்கி வீசிய காங்கிரஸ் வீட்டு வாசலில்..
அதேபோல்தான்..ஈழத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்த காலத்தில் எல்லாம் காங்கிரசுக்குத் தோள்கொடுத்துவிட்டு தமிழர்கள் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபமெடுக்க வேறுவழியே இல்லாமல் மத்திய அரசில் மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டும் வெளியே வந்தது திமுக. அப்போது திமுகவினர் அடைந்த உற்சாகத்துக்கு அளவில்லை..வெடித்த பட்டாசுகளுக்கும் குறைவில்லை..
ஆனால் இன்று நிலை என்ன? எந்த காங்கிரஸ் வேண்டாம் என்று உதறிவிட்டு, எந்த லக்கேஜை இறக்கி வைத்துவிட்டு வெளியேறிய அதே திமுக, அதே காங்கிரஸின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டு மட்டும் நிற்கவில்லை.. அவர்கள் நம்மை எட்டி உதைப்பார்களோ என்ற ஒரு வித அச்சத்துடனும் அசிங்கப்பட்டு நிற்கிறது.. ஒருவேளை தேமுதிகவை காங்கிரஸ் ஆதரித்துவிட்டால் இதைவிட திமுகவுக்கு வேறு என்ன அவமானம் வந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை.
பதவி படுத்தும் பாடு என்பது இதுதானோ! சுயமரியாதை இயக்க வழித்தோன்றல் என்பதெல்லாம்..