ஒரு அமெரிக்க வீரரை விடுவிக்க 5 தீவிரவாதிகளின் விடுதலையைக் கோரும் தலிபான்கள்
27 வயதான அமெரிக்க ராணுவ வீரர் போவ் பெர்க்தால் கடந்த 2009ம் ஆண்டு காணாமல் போனார். அப்போது அவர் ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்தார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தானில் ஹக்கானி பிரிவினரால் சிறை பிடிக்கப்பட்டதாக தெரிய வந்தது. தற்போது அவர் தீவிரவாதிகளின் சிறைக் கைதியாக இருக்கிறார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தலிபான் கமாண்டர் ஒருவர், என்பிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், போவ் பெர்க்தால் நலமுடன் உள்ளார். அவரை சிறப்பு விருந்தினர் போலத்தான் கவனித்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை அவர் முக்கியமானவர். அவரை விடுவிக்க வேண்டுமானால் குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தலிபான் கமாண்டர்களை விடுவிக்க வேண்டும். அதுவரை போவ் எங்களிடம்தான் இருப்பார் என்றார்.
முல்லா பஸல் அகமது, நூருல்லா நூரி, அப்துல் ஹக் வசீக், கைருல்லா கைர்க்வா, முகம்மது நபி ஆகிய ஐந்து பேரும் குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெர்க்தால் விடுதலை குறித்து தலிபான் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடக்கவுள்ள நிலையில் இந்த செய்தியை தலிபான் தரப்பு கசிய விட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.