ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள பெருக்கு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் அருவியில் ஆர்பரித்துக் கொட்டுதால் அங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கன மழை கொட்டிவருவதாலும், அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதாலும் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிவருகின்றனர்.

கபிணி அணையில் இருந்து தற்போது வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்து வருகிறது. தற்போது 35000 கனஅடிநீர் வரை காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலு வனப்பகுதி வழியாக, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில், அருவியாக கொட்டி, மேட்டூர் அணைக்கு செல்கிறது.
நேற்று பகல், 12:00 மணிக்கு, நீர்வரத்து, பிலிகுண்டுலு பகுதியில், 4,000 கன அடியாகவும், ஒகேனக்கலில், 3,840 கன அடியாகவும் இருந்தது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் அதிக அளவில் கொட்ட துவங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் பரிசல்களில் பயணித்தும் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
குற்றாலம் அருவியில் மான்
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் நன்றாக பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் கடனாநதி, ராமநதி,குண்டாறு ஆகிய மூன்று அணைகள் நிரம்பிய நிலையில் சேர்வலாறு, பாபநாசம், அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 106.30 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிஉயர்ந்து 109.95 அடியானது.அணைக்கு வினாடிக்கு 3661 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு1154 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்க்குடியில் 6.6 மிமீ, செங்கோட்டையில் 18, சிவகிரியில் 1, தென்காசி 9.3, ஆலங்குலத்தில் 3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் அங்கு சீசன் களை கட்டியுள்ளது. இன்று மெயின் அருவிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது மிகப்பெரிய புள்ளிமான் ஒன்று திடீரென மேலே விழுந்தது. இதில் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அச்சமடைந்தனர். போலீசார் மானை அப்புறப்படுத்திய பின்னர் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்கத் தொடங்கினர்.












Click it and Unblock the Notifications