சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு!
சென்னை: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் குப்பை தொட்டி கொள்முதல் குறித்த விவாதத்தின் போது, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளுக்கு தேவையான 1,100 லிட்டர் கொள்ளளவு உடைய இரும்பு உலோகத்தினால் ஆன காம்பாக்டர் குப்பை தொட்டிகள் தலா ரூ.16,100 வீதம் 2,000 குப்பை தொட்டிகள் வாங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது, எதிர் கட்சி தலைவரான திமுக உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் எழுந்து, குப்பை தொட்டிகள் வாங்குவதில் அதிக விலை நிர்ணயம் செய்து ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, தேவையின்றி எதுவும் கூறக்கூடாது, இதே போன்று தான் ரூ.10,000 முதல் ரூ. 50,000 செலவில் அமைக்கப்பட்ட குப்பை தொகுப்பு மையத்தை ரூ.50 லட்சம் செலவில் அமைத்ததாக உங்கள் கட்சி தலைவர்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்து அவர்களை மாட்டி விட்டுள்ளீர்கள், பேசாமல் உட்காருங்கள் என்றார்.
இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று குப்பை தொகுப்பு மையம் அமைப்பதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ள உண்மைதான். குப்பை தொகுப்பு மையம் அமைக்கப்பட்ட பல இடங்களில் தற்போது அவற்றை காணவில்லை என்றனர்.
இதற்கு பதிலளித்த சைதை துரைசாமி, குப்பை தொகுப்பு மையங்கள் பொதுமக்களின் கோரிக்கையின்படி ஒரு சில இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வேறு இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதையே கிடையாது, ஊழலுக்காகவே ஒரு கட்சி, அதற்கு பெயர் போன ஒரு தலைவர். உங்களுக்கு வேண்டாம் என்றால் கூட்டணியில் இருந்து விலகுவீர்கள். எம்.பி. சீட் வேண்டும் என்றால் கை பிடிக்கவும், கால் பிடிக்கவும் செய்வீர்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் மேயரின் இருக்கை அருகே சென்று, இந்த அவையில் இல்லாதவர்களை பற்றியும், கட்சியை பற்றியும் அவதூறு பேசி இருக்கிறீர்கள். இதை மன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் சைதை துரைசாமியை நோக்கி கை நீட்டி பேசினார். இதைக் கண்ட மேயர் சைதை துரைசாமி, கை நீட்டி பேசினால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்களும் மேயர் இருக்கை முன் கூடினர். அப்போது திமுக- அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தள்ளியதில், அதிமுக சைதை துரைசாமி சிவராஜ் கீழே விழுந்தார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் சுபாஷ் சந்திரபோசும் கீழே விழுந்தார். இதில் தலையிட வந்த பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமாரும் தள்ளுமுள்ளில் சிக்கினார். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவையில் இருந்து அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.












Click it and Unblock the Notifications