திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் எஸ்.ஐ. புகார்: குன்னூர் மாஜிஸ்திரேட் கைது
திருப்பூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குன்னூர் மாஜிஸ்திரேட் மீது பெண் சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட நீதிபதி, பல்லடம், குன்னூர் போலீஸ் துணை எஸ்பி ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:
வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னை காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன்.
இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது. தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டுகிறேன் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
மனு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாஜிஸ்திரேட்டு தங்கராஜை அவினாசி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.