ஓட்டேரி நரி.. குண்டு கோவிந்து.. நெட்டை ரவி 'டைப்' ரவுடிகளைப் பிடிக்க களமிறங்கும் 'போக்கிரி' போலீஸ்!
சென்னை: விதம் விதமானஅடைமொழிகளை வைத்துக் கொண்டு பட்டாக் கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் சகிதம் மக்களையும், சக ரவுடிகளையும் பயமுறுத்தி வரும் கிட்டத்தட்ட 50 ரவுடிகளைப் பிடிக்க சென்னை காவல்துறையின் போக்கிரிகள் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் களம் இறங்கியுள்ளனராம்.
போலீஸாரின் இந்த திடீர் பாய்ச்சல் காரணமாக ரவுடிகள் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் சற்றே திகில் பரவியுள்ளதாம்.
போலீஸார் ஏதோ ஸ்கெட்ச் போட்டு விட்டனர், யாருக்கு என்கவுண்ட்டரோ என்ற ரேஞ்சுக்கு பீதி பரவிப் போய்க் கிடக்கிறதாம்.
முதலில் சைக்கிள் ரவுடிகள்
ஒரு காலத்தில் ரவுடிகள் சைக்கிளிலும் சாதாரணமாக நடந்தும், பஸ்ஸில் போயும் தொழில் பார்த்து வந்தனர். அப்போதெல்லாம் பொதுமக்களை அவர்கள் அவ்வளவாக அச்சுறுத்துவதில்லை. தொட்டவர்களை மட்டுமே வெட்டுவார்கள்.
ரேஞ்சு மாறிப் போச்சு..
ஆனால் காலப் போக்கில் ரவுடிகளின் ரேஞ்சே மாறிப் போய் விட்டது. சுத்தமான சட்டை, பேன்ட், கையில் பிரேஸ்லெட், விலை உயர்ந்த வாட்ச், டாடா சுமோ கார் இல்லாட்டி குவாலிஸ் கார், இப்ப ஸ்கார்பியோ, பை நிறையப் பணம், கூட மாட பத்து அடியாட்கள் என ரவுடிகள் ரகளை அவதாரம் எடுத்தனர்.
தாதாக்களாக மாறிய பேட்டை பிஸ்தாக்கள்
முன்பெல்லாம் சென்னையில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ரவுடி இருப்பார்கள். ஆனால் இது பின்னர் அப்படியே மாறி பல்வேறு ஏரியாக்களுக்கும் தானே தாதா என்று பலரும் உருவாக ஆரம்பித்தனர். அயோத்திக்குப்பம் வீரமணி போன்றோர் இதற்கு நல்ல உதாரணங்கள்.
அடைமொழி அய்யாசாமிகள்
பிறகு ரவுடிகளுக்கு அடைமொழிகள் வந்து சேர்ந்தன. குட்டை குமார், நெட்டை ரவி, பான் பராக் பாலு, குண்டு கோவிந்து, குட்டி ராஜா, கட்டை ராஜா என்று விதம் விதமான அடைமொழிகளுடன் பந்தாவாக வலம் வர ஆரம்பித்தனர்.
அடங்கிய கொட்டம்
போலீஸார் இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர அடக்கி ஒடுக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் எப்போதெல்லாம் ஜெயலலிதா முதல்வராக வருகிறாரோ அப்போதெல்லாம் இத்தகைய ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டும், துப்பாக்கி தோட்டா கொண்டும் அடக்குவதில் சளைக்க மாட்டார்.
போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகள்
ஏகப்பட்ட பிரபல ரவுடிகளை சென்னை போலீஸார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளியுள்ளனர். அயோத்திக்குப்பம் வீரமணி, வெல்டிங் குமார், வெங்கடேச பண்ணையார் என்று இந்த லிஸ்ட் ரொம்பவே நீளமானது.
மீண்டும் அட்டகாசம் செய்யும் ரவுடிகள்
தற்போது சென்னையின் வட பகுதியில் ஏகப்பட்ட ரவுடிகள் மறுபடியும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இவர்களில் பலர் தங்களுக்குள்ளாக மோதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
களம் இறங்கும் போக்கிரி போலீஸ்
இப்படிப்பட்ட ரவுடிகளை தேடிப் பிடித்து ஒடுக்குமாறு போலீஸாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளாராம். ரவுடிகளைக் கண்காணித்து ஒடுக்குவதற்காகவே வைக்கப்பட்டுள்ள போக்கிரிகள் கண்காணிப்பு் பிரிவு போலீஸாருக்கு இதுதொடர்பாக ஸ்டிராங்கான உத்தரவு போயுள்ளதாம்.
குட்டி பாஸ்கர்.. கட்டை ராஜா
கட்டை ராஜா, குட்டி பாஸ்கர், வட கரை சக்திவேல், வைரம் வைரமூர்த்தி, காக்காதோப்பு பாலாஜி என கிட்டத்தட்ட 50 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாம்.
யார் கிடைச்சாலும் பிடி....
இந்த ரவுடிகளைப் பிடித்து குண்டாஸ் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்து உள்ளே தள்ள போலீஸார் தயாராகி வருகிறார்களாம். கையில் கிடைக்கும் ரவுடிகளை முதலில் பிடிக்கப் போகிறார்களாம். பின்னர் தலைமறைவு தாதாக்களுக்கு வலை வீசப்படுமாம்.
ஒரே வாரத்தில் 52 பேருக்கு குண்டாஸ்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52 ரவுடிகளைப் பிடித்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். போலீஸாரின் வேகத்தைப் பார்த்து 8 ரவுடிகள் தாங்களாகவே சரணடைந்து விட்டனராம்.
போலீஸ் பாரா உஷார்.. ரவுடிமார்களே.. அடங்குங்கப்பா!