ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் மீண்டும் ஊடுருவும் சீனா!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சுமர் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவியதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையிலும் அருணாசலப் பிரதேசத்திலும் சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவியிருந்த சீன ராணுவத்தினர் பல நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதியன்று லடாக் பிராந்தியத்தில் சுமர் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியிருக்கின்றனர். அத்துடன் எல்லைப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களை மிரட்டிவிட்டும் சீன ராணுவத்தினர் சென்றிருக்கின்றனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 6-ந் தேதியன்று இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக பெய்ஜிங்கில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் சீனாவின் ஊடுருவல் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.