பாஜகவில் இணைவது பற்றி முடிவெடுக்கவில்லை.. மோடி பிரதமராக வேண்டும்: எதியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்விக்கு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்ட எதியூரப்பாதான் காரணம் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து எதியூரப்பாவை பாஜகவில் இணைக்கும் முயற்சிகள் தொடங்கின.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கை பாஜகவில் ஓங்கிய நிலையில் மீண்டும் எதியூரப்பா இணைவார் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் முதல் முறையாக பாஜகவில் மீண்டும் இணைவது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார் எதியூரப்பா.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்களிடம் இருந்து கட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தது. ஆனால் அதுபற்றி நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி உரிய நேரத்தில் உரிய முடிவெடுப்பேன்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைவதால் மகிழ்ச்சியா என்று கேட்கிறீர்கள்... நான் அதுபற்றி எந்த ஒரு முடிவுமே எடுக்கவில்லை. நான் மட்டும் இல்லை, இந்த நாட்டின் 60% மக்கள் நரேந்திர மோடியின் தலைமையை பாராட்டுகின்றனர். அவர் பிரதமர் ஆவதை காண ஆவலாக உள்ளேன் என்றார்.