மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம்
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில் உள்ள 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கொடிமரத்தினை அகற்றி 56 அடி உயரமுள்ள புதிய தேக்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், அதன் மேல் தாமிர தகட்டின் மேல் சுமார் 11 கிலோ தங்கத்தை பயன்படுத்தி தங்க தகடு ஒட்டும் பணி முடிவு பெற்றது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், கலெக்டர் சுப்பிரமணியன் மற்றும் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், ஆன்மீக பெரியோர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
நான் மாடக் கூடலின் நடுவில் அமைந்துள்ளதும், பல புராண இலக்கியங்களை கொண்டதும், பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றதுமான உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் புதிய தங்க கொடிமரத்திற்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஈசனே, தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம், தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் வரிகள் அமைய காரணமாக விளங்கும் தலம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட தலம்.
ராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும், முனிவர்களும் பூஜித்து பேறு பெற்ற தலம். சிவபெருமான் வலது காலை தூக்கி நடனமாடிய தலம் என புல சிறப்புகளை பெற்ற திருத்தலம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் இத்தலத்தின் பெயரை கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பர்.
கொடிமரத்தை வணங்கினால் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்பார்கள். ஆண்டவனை சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கமாகும்.
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்திற்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா என்பது ஓர் அரிய நிகழ்வாகும். இப்படிபட்ட அரிய விழா தமிழுக்கு பெருமை சேர்த்த மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நடைபெறுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்த புதிய தங்ககொடிமரம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இனிதே நடைபெற எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு பக்தர்கள் அனைவரும் இந்த விழாவிலே கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரரின் அருளுக்கு பாத்திரமாகி அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.