ஒரே ஒரு பள்ளிக்கூடம்.. ஆனா ரெண்டு மாஸ்டர் இருக்காகளே....!
திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து ஏற்கனவே இருந்த தலைமை ஆசிரியர் புதிய இடத்திற்குப் போக மறுத்து அதே பள்ளியில் இருக்கிறார். புதிதாக வந்த தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்றதால் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
திருப்பூர் அருகே, குப்பாண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது; இங்கு கடந்த இரண்டு வருடமாக வேல்முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வந்தார். இவரை சமீபத்தில் முத்தணம்பாளையம் பள்ளிக்கு மாற்றினர். அங்கு பணியாற்றி வந்த சரஸ்வதி, குப்பாண்டம்பாளையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், வேல்முருகன் புதிய பணியிடத்திற்குப் போக மறுத்து விட்டார். எனக்குப் பணி இடமாற்ற உத்தரவு வரவில்லை. எனவே நான் தான் தலைமை ஆசிரியர் என்று கூறி விட்டார். இதனால் புதிதாக நியமிக்கப்பட் சரஸ்வதி குழப்பமடைந்தார். இருப்பினும் தனக்கு வந்த உத்தரவைக் காட்டி, எனக்கு இங்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நானே தலைமையாசிரியர் என்று கூறி விட்டார்.
இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில் வேல்முருகனுக்கு ஆதரவாக பள்ளியில் பொதுமக்கள் திரண்டனர். இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அங்கு வந்தார். சரஸ்வதிதான் தலைமை ஆசிரியை என்று அவர் பஞ்சாயத்து செய்தார். மேலும் அத்தோடு நிற்காமல் சரஸ்வதி இருந்த அறைக்குள் போய் அவருடன் பேசவும் ஆரம்பித்தார்.
இதனால் கோபமடைந்தனர் பொதுமக்கள். இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் லோகநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதனால் அவமானமடைந்த சரஸ்வதி அழுதபடி வெறியேறிப் போய் விட்டார்.
தற்போது இந்தப் பஞ்சாயத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமியிடம் போயுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இருவர் மீதும் புகார்கள் வந்தன. இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் வேல்முருகன் செல்ல மறுக்கிறார் என்றார்.