ஒடிஷாவில் பேய் மழை.. அடித்து செல்லப்படும் போண்டா பழங்குடிகள். அழியும் ஒரு இனம்!!
மல்காங்கிரி: ஒடிஷா மாநிலத்தில் அடித்து ஊத்தும் பேய் மழையால் பல மாவட்டங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் 4 போண்டா பழங்குடிகள் அடித்துச் செல்லப்பட்டனர். ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடி இனத்தவரை வெள்ளம் காவு வாங்க தொடங்கியிருப்பது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் ஏராளமான பழங்குடி இனத்தவர் உள்ளனர். போண்டா, டோங்கிரியா, கோண்டா, பரஜா என ஏகப்பட்ட பழங்குடிகள். இவர்களில் பலர் நம்ம சொந்தக்காரர்கள்தான். ஆம் பல பழங்குடி இனத்தவர் திராவிட இனப் பழங்குடிகள் என்றே அறியப்படுகின்றனர்.
இன்றும் அவர்கள் பேசும் மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் உள்ளன. இதை ஒரிசா பாலு உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் நிரூபித்துள்ளனர். கார்குழலில் என்ற பெயரிலும் கூட கிராமங்கள் இருக்கின்றன. இவர்களைவிட தனித்துவமான உடை, கலாசாரத்துடன் வாழ்கின்றவர்கள் "போண்டா" இனத்தவர்.
போண்டா ஹில்ஸ்
ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டம் நக்சலைட்டுகளின் கோட்டை என வர்ணிக்கப்படும். மல்காங்கிரி மாவட்டமானது ஒடிஷா- ஆந்திரா எல்லையில் இருக்கிறது. இம்மாவட்டத்தில் ஹர்புட் என்ற சமவெளியைத் தாண்டினால் அத்தனையும் பெரும் மலைகள். இவைதான் போண்டா ஹில்ஸ் என்றழைக்கப்படுகிறது. நாட்டின் எல்லையில் இருக்கும் பி.எஸ்.எப். படையின் முள்வேலி போட்டு நக்சலைட்டுகளுக்காக காத்திருக்கும் இடம்தான் ஹர்புட்
போண்டாக்கள் எப்படி இருப்பார்கள்?
ஆண்கள் வழக்கமான உடைகளில்தான் இருப்பர். ஆனால் பெண்களோடு தலையில் மழிக்கப்பட்ட முடி, கழுத்து நிறைய பெரும் வளையங்கள், இடுப்பில் அரை நிர்வாண உடை. மேலாடையாக கயிறுகளால் ஆன ஒரு வினோத உடை..இப்படித்தான் இருப்பார்கள்..
பெண்களை கண்டாலே நடுங்கும் ஆண்கள்
போண்டா இனத்தில் வயது குறைவான ஆண்களைத்தான் பெண்கள் மணந்து கொள்கின்றனர். சில கணவன்களை இடுப்பில் சுமக்கின்ற பெண்களும் உண்டு. உடலுறவில் கூட பெண்கள்தான் ஆதிக்கம்.. இதனால் பொதுவாகவே போண்டா இனத்தில் பெண்களைக் கண்டாலே ஆண்களுக்கு அப்படி ஒரு நடுக்கம்..
மாம்பழ சாராயம்
போண்டா இன மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுகிறவர்கள்.. ஆனால் என்ன நெல் வயலில் பெண்களில் இருக்க.. அதே வயல் ஓரத்தில் பெரிய பானையில் மாம்பழத்தை வைத்து சாராயம் தயாரிப்பார்கள் ஆண்கள். இந்த இனத்தில் பெரும்பாலான ஆண்கள் ‘மாம்பழ சாராய' அடிமைகள்!
அழிவின் விளிம்பில் போண்டாக்கள்
இப்படிப்பட்ட போண்டா மக்கள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடி இன மக்களில் முதன்மையானவர்கள். 1950களில் அதிகரித்து வந்த போண்டோ இனத்தவர் மக்கள் தொகை தற்போது சில ஆயிரங்கள்தான் இருக்கின்றனவாம். இவர்கள் எதற்கெடுத்தாலும் கொலை செய்கிறவர்கள்.. இவர்களால் நிரம்பி வழிகிறது சிறைச்சாலைகள்! இப்படித்தான் அழிந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்
காவு வாங்கிய வெள்ளம்
ஒடிஷாவில் தற்போது பேய் மழை வெளுத்து வாங்குகிறது. பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போண்டாக்கள் வாழும் ஹர்புட்- முதலிபோடா சாலை துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டுள்ளனர். அத்துடன் மலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றன காட்டாறு. இப்படிப்பட்ட வெள்ளத்தில் ஒரே நாளில் பல போண்டா பழங்குடிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கிற போண்டாக்களில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டாலே பரிதாபம்தான்.. நேற்று 5 பேர் அடித்துச் செல்லப்பட்டதை நேரில் பார்த்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் அடித்துச் செல்லப்பட்டனர் என்று தெரியவில்லை என்கிறது ஒடிஷா வட்டாரங்கள்.