இந்திய அரசியலில் சுனாமியாக சுழன்றடித்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழலும் குவாத்ரோச்சியும்!
டெல்லி: இந்தியாவில் பிறக்காத இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத ஒருநபராக குவாத்ரோச்சி இருந்தாலும் இந்திய அரசியலில் அதிகம் பேசப்பட்டவர் குவாத்ரோச்சி.. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் காங்கிரஸையும் கதிகலங்க வைத்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்டவர் குவாத்ரோச்சி.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்.. 1980களின் மத்தியில் இந்தியாவை அதிர வைத்த மிகப் பெரும் சம்பவம். இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்டவர்தான் குவாத்ரோச்சி.. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்த போதும் இவர் 1993-ல் இந்தியாவை விட்டு தப்ப அப்போதைய காங்கிரஸ் அரசு உதவியதால் 1990களிலும் அதிகம் பேசப்பட்டவர்... ஏன் அண்மைக்காலம் வரை சுமார் 30 ஆண்டுகாலமாக இந்திய அரசியல்வாதிகள் உச்சரிக்கும் பெயராக இருந்தது குவாத்ரோச்சி
போபர்ஸ் ஊழல் என்ன?
1986ஆம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி இந்திய அரசுக்கும் சுவிட்சர்லாந்து ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனமான போபர்ஸுக்கும் இடையே 285 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதியன்று இப்ப ஒப்பந்தத்துக்காக இந்தியாவின் அரசியல் தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று சுவிஸ் வானொலி கூற இந்தியாவில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.
ராஜிவ் குடும்பத்துக்கு நெருக்கமான குவாத்ரோச்சி
போபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதற்காக இந்திய அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் இடைத்தரகராக செயல்பட்டவர்தான் இந்த குவாத்ரோச்சி. இத்தாலி தொழிலதிபரான குவாத்ரோச்சி, ராஜிவ் காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தார் என்பதால் இந்திய அரசியலில் புயல் வீசியது. போபர்ஸ் பீரங்கிகளை வாங்க அப்போது ரூ64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது.. இந்த பணம் கைமாற இடைத்தரகாக இருந்தவர் குவாத்ரோச்சி என்பதுதான் குற்றச்சாட்டு
அம்பலப்படுத்திய வி.பி.சிங்!
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியவர் வி.பி.சிங். இவர் ராஜிவ் பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். ஆனால் அவரே இந்த ஊழலை வெளிப்படுத்தியதால் அமைச்சர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட அவர் காங்கிரஸை விட்டே வெளியேறினார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளிப்படுத்தியதில் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் செம தோல்வி
இந்த ஊழல் புயல் சுனாமியாக சுழல 1989ஆம் ஆண்டு வி.பி.சிங் ஜன மோர்ச்சாவை முதலிலும் பின்னர் ஜனதா தளத்தையும் உருவாக்கினார். பின்னர் ஜனதா தளம் தலைமையில் திமுக, தெலுங்குதேசம், அசாம் கனபரிசத் ஆகியவை இணைந்து தேசிய முன்னணி உருவானது. இந்த சூழலில் நாடு லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸுக்கு பேரிடியாக போபர்ஸ் பீரங்கி ஊழலே பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. ராஜிவ் பிரதமர் பதவியை இழந்தார்
இந்தியாவை விட்டு தப்ப உதவிய காங்கிரஸ்!
இந்தியாவில் வழக்கு நிலுவையில் இருந்த போது குவாத்ரோச்சி கைது செய்யப்படவில்லை. மாறாக கைது நடவடிக்கையில் இருந்து தப்ப 1993ஆம் ஆண்டு அவர் பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற உதவி செய்தது அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதனால் மீண்டும் போபர்ஸ் விவகாரம் வெடித்தது.
சுவிஸ் வங்கி ஆவணங்கள்
இந்தியாவில் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது 1997ஆம் ஆண்டு சுவிஸ் வங்கி போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான 500க்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது.
பாஜக ஆட்சிக் காலத்தில்
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 1999 அக்டோபர் 22-ந் தேதி சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் குவாத்ரோச்சி, ராஜிவ்காந்தி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றன. இந்தியாவால் தேடப்படுகிற நபரானார் குவாத்ரோச்சி
உச்சநீதிமன்றத்தில்..
2002ஆம் ஆண்டு ஜூன் 10-ந் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. ஆனால் 2003ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தியது.
மலேசியாவில் சிக்கினார்
சிபிஐயின் கோரிக்கையை ஏற்று இண்டர்போலானது மலேசியாவில் குவாத்ரோச்சியை கைது செய்தது. ஆனால் அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 2003ஆம் ஆண்டு இண்டர்போலானது குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிரங்கப்படுத்தி முடக்கியது.
ராஜிவ் பெயர் நீக்கம்
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் டெல்லி உயர்நீதிமன்றத்தால் ராஜிவ் பெயர் நீக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து தொழிலதிபர்கள் பெயரும் நீக்கப்பட்டது.
நாடு கடத்தல் கோரிக்கை
2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் குவாத்ரோச்சியை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே ஆண்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கத்தை மத்திய அரசு நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மீண்டும் சிக்கினார்
2007ஆம் ஆண்டும் அர்ஜெண்டினாவில் குவாத்ரோச்சி கைது செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி குவாத்ரோச்சி தடுத்து வைக்கப்படார். ஆனால் அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மீண்டும் பலனளிக்காது போக 2007 பிப்ரவரி 13-ந் தேதி அர்ஜெண்டினாவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவானது. இரண்டு முறை இண்டர்போலில் சிக்கி தப்பியவர்.
குவாத்ரோச்சி விடுவிப்பு
2011ஆம் அனடு மார்ச் 4-ந் தேதி போபர்ஸ் ஊழலில் குவாத்ரோச்சி மீதான புகாருக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனாலும் போபர்ஸ் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் குவாத்ரோச்சியும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.