மதிய உணவை சாப்பிட அச்சப்படும் பீகார் பள்ளி குழந்தைகள்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பள்ளிக்கூட்டத்தில் மதிய உணவு சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் மதிய உணவை தொடவே மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தில் பூச்சிக் கொல்லி கலந்த பாத்திரத்தில் உணவு சமைத்ததால் அதை சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 22 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னமும் 30 குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவை தொடவே குழந்தைகள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. அப்படியே வாங்கினாலும் அதை குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுகின்றனராம்.. பள்ளிக் கூட உணவை தொடவே கூடாது என்று பெற்றோர்கள் எச்சரித்தும் இருக்கின்றனராம். இதனால் அம் மாநிலத்தில் மதிய உணவு திட்டம் கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது.