சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப் படி நடந்த ஒடிஷா கிராம கூட்டங்கள்- வேதாந்தா குழுமத்துக்கு கடும் எதிர்ப்பு!
லாஞ்சிகர்: ஒடிஷா மாநிலம் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேதாந்த குழுமத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற முதல் கட்ட கிராம கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் கலஹாண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களில் விரிந்து கிடக்கிறது நியாம்கிரி மலை. இது டோங்கிரியா கோண்ட் எனும் பழங்குடிகளின் தாயக பிரதேசம். பாக்சைட் தாது வளம் உள்ளது இந்த மலைப் பகுதி. இதனால் பாக்சைட் தாது வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இதற்கு தொடக்கம் முதலே டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியாம்கிரி மலையை ஒட்டிய லாஞ்சிகரில் இயங்கி வந்த வேதாந்த குழும தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாக்சைட் தாதுவை குஜராத் மாநிலம் தருவதாக அறிவித்ததால் ஜூலை மாதம் மீண்டும் ஆலை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி|
இதனிடையே வேதாந்த குழுமத்துக்கான அனுமதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி கொடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து நியாம்கிரி மலை கிராமங்களே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் இதற்கான கூட்டங்களை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நடத்தவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒடிஷா அரசு, ஜூலை 18 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய இரு நாட்களில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.
முதல் கட்ட கூட்டம்
இதன்படி நேற்று கலஹாண்டி மாவட்டம் சேர்கபாடியில் நேற்று முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. 12 கிராமங்களைச் சேர்ந்த 36 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 16 பேர் பெண் பிரதிநிதிகள். இவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பழங்குடி இனத்தவரும் கூட்டம் நடைபெறும் இடத்தில் கிராமம் கிராமமாக குவிந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
நியாம்கிரி எங்கள் குலசாமி
இந்தக் கூட்டத்தில் பேசிய அனைவருமே ஒட்டுமொத்தமாக வேதாந்த குழுமத்தை அனுமதிக்கக் கூடாது என்று கூறினர். "நியாம்கிரி மலைதான் எங்களுக்கு தாய் தகப்பன் சாமி.. அதுதான் எங்களுக்கு காற்று, நீர், உணவு அனைத்தையும் தருகிறது. இது எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த மலை. மீன் தண்ணீரை விட்டு வெளியே வந்தால் எப்படி இறந்து போய்விடுமோ அதுபோல்தான் எங்களது வாழ்க்கையும் என்று ஒரியா மற்றும் குயி மொழிகளில் கதறினர்.
அடுத்த கூட்டம்
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட கூட்டம் ராயகடா மாவட்டத்தில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திலும் நிச்சயம் வேதாந்தா குழுமத்தை எதிர்த்தே மக்கள் கருத்து தெரிவிப்பர் என்று தெரிகிறது.