உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு விஜயகாந்த் வாழ்த்து
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, தனது மாணவ பருவத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியை பயின்று, சட்டம் மற்றும் நீதியின் பேர் கொண்ட பற்றால் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்தவர் மதிப்பிற்குரிய நீதியரசர் பி. சதாசிவம் அவர்கள். சட்டக் கல்வியை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக 1973ம் ஆண்டு பதிவு செய்து கொண்டு, தனது சிறப்பான வழக்கறிஞர் பணியை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே துவக்கினார்.
அதன் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பேற்று, தன்னுடைய கடமையை செவ்வனவே செய்து வந்தார். சிறந்த பண்பாளராகவும், பார்ப்பதற்கு எளிமையாகவும் இருந்த இவர் 2007ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக டெல்லிக்கு சென்றார். அங்கே தொடர்ந்து தனது திறமையான, நேர்மையான பணியால் தற்போது தலைமை நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருப்பது தமிழகத்திற்கும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமைக்குரிய விஷயமும் ஆகும். இன்று உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.சதாசிவத்தின் பணி சிறக்க, தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் உளமார வாழ்த்துகின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நீதியரசர் சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.