லோக்சபா தேர்தல் கருத்துக் கணிப்பு: தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸுக்கு கூடுதல் இடங்களாம்!
லோக்சபா தேர்தலுக்கு நாளையே தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளும் மாநில் அரசின் செயல்பாடு எப்படி? என்பது உள்ளிட்ட பல அம்சங்களை முன்வைத்து இந்த கருத்துக் கணிப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 65% பேர் ஆளும் அதிமுக அரசின் செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாட்டில் 39% பேர் மட்டும் திருப்தி தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுக பெற்றிருந்த 23% வாக்குகளை விட 3 % கூடுதலாக 26% வாக்குகளை அதிமுக பெறுமாம்.
ஆனால் திமுகவோ கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றிருந்த 25% வாக்குகளை விட பெரும் பின்னடைவை சந்தித்து 16% வாக்குகளைப் பெறுமாம்.
தேமுதிக கட்ந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் 10% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 7% வாக்குகள் கிடைக்குமாம். 18% வாக்குகள் யாருக்கு வாக்கு என்பதை தீர்மானிக்கவில்லையாம்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக கூட 2009ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்றுவிடுமாம். அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு 10% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 18% வாக்குகளும் கிடைக்குமாம். 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கு சதவீத வாக்குகளை முதல் முறையாகப் பெற உள்ளதாம்.
அதிமுக முன்னிலை என்பதை ஏற்க முடிகிறது. ஆனால், காங்கிரஸ் 18 சதவீத வாக்குகளையும் பாஜக 10 சதவீத வாக்குகளையும் தமிழகத்தில் பெறப் போகிறது என்பதைத் தான் நம்ப முடியவில்லை.