செவ்வாய் கிரகத்தில் முதலில் யார் குடியேறுவார்கள்?
லண்டன்: செவ்வாய் கிரக தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது லேசான காரியமல்ல. ஆனால் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மட்டும் பல நாடுகளிடையே போட்டி போட்டுக் கொண்டு நடந்து வருகிறது.
செவ்வாய் கிரக ஆய்வுப்பயணத்தில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், சீனாவுக்கு அடுத்த படியாக, ஆறாவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது. விரைவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவ உள்ளது இந்தியா.
பல நாடுகளும் விண்கலத்தில் குட்டி ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்து வரும் நிலையில் 2021ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
செவ்வாயின் மீது மோகம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான முயற்சி, 18ம் நூற்றாண்டிலிருந்தே துவங்கி விட்டது. இது வரை, ஐந்து நாடுகள் தான் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளன. பூமியில் வாழ்ந்து போரடித்து விட்டதால் எப்படியாவது செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க விண்கலம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய எண்டீவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. நாசா அனுப்பிய எண்டீவர் விண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைகளை போட்டோ எடுத்து அனுப்பி வருகின்றன.
2033ல் மனிதர்கள்
இன்னும் 20 ஆண்டுகளில் அதாவது 2033ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பிவிடவேண்டும் என்பது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் முடிவு. அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்து சாதனை
நாசாவின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்து வருகிற 2021ஆம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. அதற்காக 3 பேர் பயணம் செய்யும் விண்கலம் ஒன்றை லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
21ம் நூற்றாண்டின் சாதனை
''செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதுதான் அடுத்த மிகப்பெரிய இலக்கு. அதன் மூலம் சந்திரனில் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் புஷ் ஆல்ட்ரினின் சாதனையை 21ஆம் நூற்றாண்டில் நாங்கள் நிகழ்த்தவிருக்கிறோம் என்கிறார் இந்த குழுவின் தலைவர் பேராசிரியர் டாம் பைக்.
ஐஸ்படிவங்கள்
மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் அதே நேரத்தில், மற்றொரு ராக்கெட்டில் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதிக்கு 'ரோபோ'க்களையும் அனுப்ப உள்ளனர். அவை அங்குள்ள ஐஸ் படிவங்களை ஆய்வு செய்யுமாம்.
எல்லாம் வியாபாரம்தான்
செவ்வாய் கிரகத்தை ஆராய, இஸ்ரோ மேற்கொள்ளும் பயணம் மற்றும் ஆய்வுகள், பெருமைக்காக அல்ல; வியாபார நோக்கமே அதில் முன்னிற்கிறது, என, சில தினங்களுக்கு முன்பு இஸ்ரோ தலைவர், கே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எது எப்படியோ கூடிய விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கேயும் பிளாட் போடாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.