ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு விசாரணை: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு
ஏர்செல் நிறுவனப் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வலியுறுத்தி, ஏர் செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் நிலை தொடர்பான அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையை முழுமையாக முடிக்க 2 மாத அவகாசம் தேவை என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.
அப்போது, வழக்கு விசாரணையில் சிபிஐ மெத்தனமாக செயல்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஏர்செல், மேக்சிஸ் இடையிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய அந்நிய முதலீடு மேம்பாடு வாரியத்தின் கூட்டத் தகவல்களை தாக்கல் செய்யுமாறும், சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.