கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார் விஜயகாந்த்.. வக்கீல்கள், கட்சியினர் 'கப்சிப்'!
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், விஜயகாந்த் கடந்த ஜூன் மாதம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து அரசு வழக்கறிஞர், தேமுதிகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கொடுத்த புகாரின்பேரில், விஜயகாந்த் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா, விஜயகாந்த்துக்கு முன் ஜாமீன் வழங்கியும், சென்னை பெருநகர நீதிமன்றத்தில் தினசரி காலை கையெழுத்திடுமாறும் நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கினார்.
இந்த நிலையில் நிபந்தனையை தளர்த்தக் கோரி விஜயகாந்த் சார்பி்ல மனு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி மாலா, மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து விஜயகாந்த் இன்று கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் நீதிபதி திரிவேணி, விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
விஜயகாந்த்துடன் அவரது வக்கீல்கள், கட்சியினரும் வந்திருந்தனர். ஆனால் நாகர்கோவில் கோர்ட்டில் ஏற்பட்ட அனுபவத்தால், இன்று அத்தனை பேரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மகா அமைதியாக கப்சிப்பென்று காணப்பட்டனர்.