மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட குற்றாலம் மலர் கண்காட்சி
குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் திருவிழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி துவக்க விழா நடந்தது. அழகுஅழகான பூக்களின் அணிவகுப்பைக் கண்டு மக்கள் குதூகலித்தனர்.
குற்றாலம் ஐந்தருவி எக்கோ பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார்.
மலர் கண்காட்சியை தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது...

நல்ல சிந்தனை வரும்
குற்றாலத்தில் பல ஆண்டுகளாக சாரல் விழா நடத்தப்பட்டு வந்தாலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்யும் வகையில் இந்த ஆண்டு கண்காட்சிகள் பல நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல சிந்தனை ஏற்படக்கூடும்.

குளிக்க மட்டுமா குற்றாலம்
குளிப்பதற்காகவே மட்டும் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தகைய கண்காட்சிகளை உருவாக்கி தந்து அதனை ரசிக்க செய்வதுடன் அதன் புதுமைகளையும், பயன்களையும், அற்புதங்களையும் அனைவரும் அரியும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இது புதிது
இதுபோன்ற கண்காட்சி எல்லாம் பெங்களூரு, கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் தான் நடத்தப்பட்டு வந்தது. இங்கு நடப்பது புதிது என்றாலும் தற்போது அது பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்
ஐந்தருவியில் எக்கோ பூங்காவில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதன் மூலம் இப்பூங்காவில் உள்ள சிறப்பு அம்சங்களையும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியினால் விவசாயிகளும் ஊக்கப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இதனை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள் தான்.

காதலர்களுக்குப் பிடித்தது பூக்கள்தான்
தற்போது இளைஞர்கள் அதிகளவில் விரும்புவது பூக்களைத்தான் ஏனென்றால் "காதலர் தினத்தை' கொண்டாடும் இளைஞர்கள் பூக்களை வைத்து தான் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள பூக்களை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதன் அழகை மேலும், மேலும் ரசிக்க தூண்டுகிறது. எனவே ""மரங்களை வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்'' என்ற உறுதிமொழியையும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சிறப்பான ஆட்சி நடத்தும் ஜெ.
இயற்கையை ரசித்தால் தான் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறப்பான அரசை நடத்தி வருகிறார்.அதன் அடிப்படையில் குற்றாலத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக அனைத்து பணிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

நல்ல பேர் வேண்டும் குற்றாலம்
ஊட்டி, கொடைக்கானலில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காட்டிலும் தமிழகத்தில் குற்றாலத்தில் நடக்கும் மலர் கண்காட்சி தான் பெயர் பெற்றதாக இனி விளங்க வேண்டும். குற்றாலம் வரும் காலத்தில் உலக வரைபடத்தில் சிறப்பாக அமைவதற்கு நாம் அனைவரும் காரணமாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

விதம் விதமான பூ அலங்காரம்
வண்ண வண்ண பூக்களால், மீன், மயில், பட்டர்பிளை, டால்பின் போன்ற உயிரினங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இந்த மலர் கண்காட்சியை குற்றாலம், செங்கோட்டை, தென்காசி பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி வெளிமாநில, மாவட்ட சுற்றுலாப் பயணிகள் ரசித்த வண்ணம் பார்வையிட்டனர்.

8 வகை ரோஸ்
மலர் கண்காட்சியில் 8 வகையான ரோஸ், ஆந்தூரியம் 2 வகை, ஜெர்பரா 6 வகை, கார்நேசியம் 8வகை, ஹெலிஸ்கோனியம் 3 வகை, ஆசியாடிக்லிப்ரா 6வகை, கேந்தி 5 வகை, சம்மங்கி 3 வகை, கோழி கொண்டை 3 வகை, மரிக்கொழுந்து 1 வகை, மல்லிகை 3 வகை, வாடாமல்லி 1வகை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையான 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூக்கள் மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications