வாட்டர் பாக்கெட்டைத் தூக்கி வீசி அத்வானி கூட்டத்தில் ஒரே சண்டை!
சேலம்: சேலத்திவ் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்ட கூட்டத்தில் மேடைக்குக் கீழே தொண்டர்கள் வாட்டர் பாக்கெட்களைத் தூக்கிப் போட்டு சீட்டில் இடம் பிடிக்க சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிக மிக மிக பலத்த பாதுகாப்புடன் நேற்று இந்த பொதுக்கூட்டம் சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடந்தது.
அத்வானிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவிதமான சிக்கலும் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள போலீஸார் மிகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டனர்.
3000 போலீஸார்
அத்வானி பொதுக் கூட்டத்திற்காக கிட்டத்தட்ட 3000 போலீஸார் மைதானத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
டவர் அமைத்து கண்காணிப்பு
ஜவஹர் மில் மைதானத்தில் உயரமான கோபுரம் அமைத்து அங்கிருந்தும் கண்காணிப்பு செய்தனர் போலீஸார். மைதானத்தை சுற்றி உள்ள வீடுகள், கட்டிடங்கள் மாடிகளில் நின்றும் கண்காணித்து வந்தனர்.
தொண்டர் முதல் ரிப்போர்ட்டர் வரை சோதனைதான்
பயங்கர சோதனைக்கு பிறகு தான் தொண்டர்கள் முதல் பத்திரிக்கையாளர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர்.
மிஸ்ட் கால் கொடுங்கப்பா
மேலும் உள்ளே நுழைவோர் செல்போன் வைத்திருந்தால் அதிலிருந்து 8300049557 எனும் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க சொல்லி பின் அனுமத்திதனர்.
கிளிக் ப்ளீஸ்...
அதேபோல கேமரா வைத்திரு்நதால், அதை ஒருமுறை கிளிக் செய்யச் சொல்லி செக்கப் செய்த பிறகே உள்ளே விட்டனர்.
தமிழிசையாக இருந்தால் என்ன ....
வி.ஐ.பி நுழைவாயிலிலும் கூட இதே போல கெடுபிடிதான். மாநில பொதுச் செயலாளராக உள்ள தமிழிசை செளந்தரராஜன் வந்தபோது, செல்போன் எடுத்து செல்ல கூடாது அல்லது ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும் என போலீஸார் கூற, நான் மாநில பொறுப்பில் உள்ளவள்.இது போல பல பொதுக்கூட்டம் பார்த்துள்ளோம் இப்படி கெடுபிடி செய்கிறீர்களே என சிரித்தபடி செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு வந்தார்.
பாட்டில் வீசி சண்டை
இந்த நிலையில் மேடைக்கு முன்புறம் இருந்த இருக்கையில் உட்கார தொண்டர்களுக்குள் அடிதடியாகி விட்டது. வாட்டர் பாட்டில்களைத் தூக்கி வீசி சண்டை போட்டுக் கொண்டனர். போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.