ஏரலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோயிலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசைக்காக ஜூலை 28ம் தேதி கொடியேற்றப்பட்டது.
தினமும் இரவு சாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு 1 மணி அளவில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
7ம் தேதி காலை 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் தாகசாந்தியும், இரவு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்தடையும் ஆனந்தகாட்சி மற்றும் கற்பூர தீப தரிசனம் போன்றவை நடக்கிறது.
இந்த விழாவை காண பக்தர்கள் கார், வேன், பஸ் மூலம் கோயிலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் திருநெல்வேலி,தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்பட முக்கிய பகுதிகளிலிருந்து அரசுசார்பில் முக்கிய வழித்தடத்தில் பஸ்களும் இயககப்படுகின்றன.
பக்தர்கள் இரவு தாமிரபரணி ஆற்றில் தங்குவதற்காக மின் விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பணியாளர் தீவிரமாக செய்து வருகின்றனர்.