மத்திய பிரதேச மதரஸாக்களில் விரைவில் பகவத் கீதை கட்டாயப் பாடம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் கீதை கட்டாயப் பாடமாக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 1ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு உருது பாடப்புத்தகங்களில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உருது பாடப்புத்தகங்களை கொண்டுள்ள அனைத்து இஸ்லாமிய பள்ளிகள் அல்லது மதரஸாக்களுக்கு பொருந்தும்.
இது குறித்து சிறுபான்மை கல்விக்கான மத்திய அரசின் தேசிய கண்காணிப்பு குழு உறுப்பினர் ஹலீம் கான் கூறுகையில்,
அரசின் இந்த உத்தரவு அரசியல் அமைப்புக்கு எதிரானது. அரசு தன் உத்தரவை வாபஸ் பெறவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றார்.
முன்னதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு சூரிய நமஸ்காரம் மற்றும் மந்திரம் கூறுதல் ஆகியவற்றை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கியது. இதை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு தான் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிறப்பு இந்தி புத்தகங்களிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிறப்பு ஆங்கில புத்தகங்களிலும் கீதை கடந்த மாதம் சேர்க்கப்பட்டது. மொத்தமாக அனைத்து வகுப்பு பாடப் புத்தகங்களிலும் கீதையை பாடமாக சேர்த்தால் பெரும் பிரச்சனை எழும் என்று பகுதி, பகுதியாக சேர்க்கப்படுகிறது.