நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கிய பாகிஸ்தான் தாக்குதல்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா, 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சிக்குரியது. இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் இது தொடர்பான அறிக்கை அளிப்பார் என்றார். ஆனால் இதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்க மறுத்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கின.
லோக்சபாவிலும் இதேபோன்ற நிலைமை நீடித்ததால் அங்கும் பிற்பகல் வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் லோக்சபா பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடிய போதும் ஒருங்கிணைந்த ஆந்திரா கோரி காங்கிரஸ் எம்.பிக்களே முழக்கம் எழுப்ப சபை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின் 3 மணிக்கு இரு சபைகளும் கூடின.
ராஜ்யசபாவில் சிறிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தினார்.
லோக்சபாவில் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி விளக்கம் அளித்தார். அப்போது, எல்லையில் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என்றார்.
ஆண்டனியின் இந்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் மீரா குமார் அனுமதி மறுத்து சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.