திருத்தணியில் சீமான் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு
திருவள்ளூர்: திருத்தணியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் ராஜா(32). நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை செயலாளர். அவர் அகூர் பகுதியில் கோணிப்பை தைத்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி சரண்யா. அவர்களின் மகன் மருதப்பாண்டியன்(4). நேற்று மதியம் கடைக்கு சென்ற ராஜா இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் கவலை அடைந்த சரண்யா அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை தெரிவித்து அவர்கள் உதவியுடன் தனது கணவரை தேடினார். இந்நிலையில் சித்தூர்-திருத்தணி சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நள்ளிரவு 1 மணி அளவில் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பிற்றி அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தது பசும்பொன் ராஜா என்பது தெரிய வந்தது. அவரது உடலை அவரது மனைவி அடையாளம் காட்டினார். ராஜாவின் உடல் கிடந்த இடத்தில் அவரது பைக் மற்றும் செல்போன் கிடந்தது. அவர் கொல்லப்படும் முன்பு யாருடன் பேசியுள்ளார் என்ற தகவலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ராஜா அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் விவகாரத்தால் அவருக்கும் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டாரா அல்லது கட்சி தகராறா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இது தவிர ராஜா வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
ராஜா கொல்லப்பட்டது குறித்து அறிந்த நாம் தமிழர் கட்சியினர் திருத்தணியில் குவிந்துவிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படவிருக்கின்ற அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.