கூலிப்படை மிரட்டல் - வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம்... தேமுதிக எம்.எல்.ஏக்கள் பகீர்
சென்னை: கூலிப்படையினர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியுள்ளதாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
கூலிப்படை குறிவைத்துள்ள தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு தருவதில் போலீசார் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
கூலிப்படையினரால் அச்சுறுத்தல் உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தர கோரியும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருண் முருகேசன், அனகை சுப்பிரமணியன், சேகர் ஆகியோர் இன்று காலை தமிழக டிஜிபியை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.
டிஜிபி இல்லையே
அப்போது, டி.ஜி.பி ராமானுஜம் இல்லாததால் ஏ.டி.ஜி.பி ராஜேந்திரனை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர். அதில், .கூலிப்படையினரால், தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு தரக்கோரி குறிப்பிட்டிருந்தனர்
தட்டிக்கழிப்பதா?
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள், பாதுகாப்பு குறித்து கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும் என ஏ.டி.ஜி.பி கூறினார் என்றும், பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் தட்டிக் கழிக்கிறது என்றும் புகார் கூறினர்.
உயிருக்கு பாதுகாப்பு இல்லை
பாதுகாப்பு பிரச்னையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என போலீஸ் வித்தியாசம் பார்க்கிறது என்று குற்றம்சாட்டிய தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள், கூலிப்படை மிரட்டலால் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.