மேகாலயத்தை பிரித்து காரோலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி போராட்டம்!
ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலயாவை காரோலாந்து மற்றும் காசி ஜெய்ந்தியா மாநிலங்களாக பிரிக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேகாலயா மாநிலமானது காரோ மற்றும் காசி ஜெய்ந்தியா மலைப் பகுதிகளைக் கொண்டது. இந்த இரண்டு மலைப் பகுதிகளும் மொழி, இன அடிப்படையில் வெவ்வேறானவை என்பதால் தனித் தனி மாநிலங்களாக உருவாக்க வேண்டும் என்பது கோரிக்கை.
இதனை வலியுறுத்தி பல்வேறு காரோ மலைப் பகுதி இயக்கங்களை உள்ளடக்கிய காரோ ஹில்ஸ் மாநில இயக்க கூட்டுக் குழுவினர் நேற்று முதல் 2 நாள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த கூட்டுக் குழுவின் பொதுச்செயலாளர் அகஸ்டின் மரா, காரோலாந்து தனி மாநில கோரிக்கை என்பது நீண்டகாலம் நாங்கள் வலியுறுத்தி வருவது. மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி காரோலாந்து உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
மேலும் மத்திய அரசால் தெலுங்கு பேசும் மக்களுக்காக தெலுங்கானா அமைக்கப்படும் போது காரோ மக்களுக்காக காரோலாந்து ஏன் அமைக்க முடியாது? காரோலாந்து அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications