சிறுத்தை வருதுடே... ஓடு ஓடு.. களக்காட்டில் விவசாயிகள் பீதி
களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை, நாயை அடித்து இழுத்து சென்றது. இதனால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதும், அட்டகாசம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
யானைகள் ஊருக்குள் வந்து மரங்களை முறித்து போடுவதும், காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், சிறுத்தைகள் ஆடு, நாயை இழுத்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இரவு 12 மணி அளவில் கள்ளியாறு என்ற பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஓன்று சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துகள் புகுந்து தோட்ட காவலுக்கு வளர்க்கும் நாயை விரட்டியது.
சிறுத்தையை கண்ட நாய்கள் குரைத்தவாறே தப்பி ஓடின. இந்த சத்தத்தை கேட்ட விவசாயிகள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் ஒரு சிறுத்தை நாயை வாயில் கவ்வியாறு காட்டுக்குள் ஓடி விட்டது. இதை பார்த்த விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாயை கொல்லும் சிறுத்தைகள் மனிதர்களை எப்போது தாக்குமோ என அச்சமாக இருக்கிறது. இது போல் அட்டகாசம் செய்யும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மீ்ண்டும் வராதவாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாலை விவசாயிகள் தோட்டத்துக்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.