வெளிநாட்டு வேலைவாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: பெண் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்த அவரிடமிருந்து 20ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அனிதாதேவி, இவரது கணவர் சார்லஸ் மலேசியா நாட்டு குடியுரிமை பெற்றவர். மலேசியாவில் பலருடன் நெருக்கமாக இருப்பது போல பல்வேறு போட்டோக்கள் எடுத்து வைத்துள்ளார். இதனை வைத்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் தனது கணவர் முரளியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.
இதே போல இவருக்கு அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஒரு லட்ச ரூபாயும், தமிழரசன் ஒரு லட்சத்து 15ஆயிரம் ரூபாயும் பல தவணைகளில் கடந்த 2011ம் ஆண்டு கொடுத்துள்ளனர். சொன்னபடி வேலை வாங்கி தராமலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார். இதே போல பலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட செல்வி கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி அனிதாதேவியை கைது செய்து அவரிடமிருந்த 20ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். அனிதாவிடம் ஏமாந்தவர்கள் பற்றிய பட்டியல் சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் உள்ளதாகவும் அந்த புகாரை பெற்று கூடுதல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கடந்தாண்டே அனிதாவிடம் ஏமாந்தவர்கள் எஸ்பியிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த புகாரை விசாரிக்க விடாமல் காவல்துறையிலேயே சிலர் தடுத்துவிட்டனர்.
எஸ்பி தனிப்படை அமைத்து அனிதாவை கைது செய்ய உத்தரவிட்ட போது அனிதாவிடம் தகவல் சொல்லி அவரை திண்டுக்கல்லுக்கு போலீசார் தப்பியோட ஐடியா கொடுத்தனர். திண்டுக்கல்லுக்கு தனிப்படை தேடிப்போன போது அனிதாவின் செல்போனுக்கு எஸ்ஐ ஒருவரே தகவல் சொல்லியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் எஸ்பி சம்பந்தப்பட்ட எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மானாமதுரை டிஎஸ்பி வெள்ளத்துரையிடம் புகார் கொடுக்கப்பட்ட போது தனிப்படை போலீசாரை நியமித்து அனிதாவை கைது செய்து விட்டார். அனிதாவை விடச்சொல்லி பலரும் நெருக்கடி கொடுத்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்து விட்டார். தற்போது அனிதா கைது செய்யப்பட்ட விபரம் அறிந்தததும் பலரும் புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்களை அனிதா ஏமாற்றி இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.