தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு.. ஜெகன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்!
ஹைதராபாத்: ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது அம்மா விஜயாவும் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சியினரும் ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது போராட்டம் நடைபெற்று வரும் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் செல்வாக்கு மிக்க கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அழக்கில் சிறையில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது எம்.பி. பதவியை ராஜினமா செய்துள்ளார்.
இதேபோல் அவரது அம்மா விஜயாவும் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த இருவரது ராஜினாமாவால் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் போராட்டம் வலுவடையக் கூடும்.