'300 ஆண்டுகளில் 200பேருக்கு வந்த அதிசய நோயே குழந்தையின் உடலில் தீப்பிடிக்க காரணம்'
சென்னை: மர்மமான முறையில் குழந்தையின் உடலில் திடீரென தீப்பிடிப்பதற்கு காரணம் ஒரு அதிசய நோய் என்றும் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சென்னை மருத்துவர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த டி.பரங்குனி கிராமத்தைச் சேர்ந்த கர்ணனின் குழந்தை ராகுலின் உடலில் திடீர் திடீரென தீப்பற்றி எரிவதும் அருகில் உள்ள குடிசைகள் எரிவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்த குழந்தைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோய் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் நாராயண பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தை ராகுலுக்கு வந்துள்ள நோய் ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன் என்ற அதிசய நோய்.
இது உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்துள்ளது. அதாவது ஒரு வகையான வாயு உடலின் உள்ளே இருந்து குழந்தையின் தோல் வழியாக வெளியே வருகிறது. அந்த வாயு எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதன் காரணமாக குழந்தையின் அருகே வெப்பமாக இருந்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருந்தாலும், யாராவது சிகரெட் போன்றவற்றை பிடித்துக்கொண்டிருந்தாலும் குழந்தையின் உடம்பில் தீப்பிடித்துவிடும். வியர்வை வியர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த அபூர்வ நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் தீப்பிடிக்காது. காற்றோட்டமான இடத்தில் இருந்தாலும் தீப்பிடிக்காது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறோம்.தீக்காயங்களுக்கு மருந்துபோடுகிறோம். மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
இது பில்லியோ, சூன்யமோ இல்லை. தெய்வக்குற்றமும் இல்லை. அறிவியல் ரீதியில் இது ஒரு நோய் என்றார்.