வாயில் வந்ததையெல்லாம் பேசும் நிதீஷ் அமைச்சர்கள்.. இந்திய வீரர்களைக் கொன்றது பாக். இல்லையாம்!
பீம் சிங் என்ற அமைச்சர் முன்பு கருத்து கூறுகையில், சாவதற்காகவே பலர் ராணுவத்தில் போய்ச் சேருகின்றனர் என்று ராணுவத்தினர் குறித்து இழிவாகப் பேசியிருந்தார். மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தானியப் படையினரால் கொல்லப்பட்ட பீகார் வீரர்களின் உடல்களைப் பெறவும் அவர் போக மறுத்தார். தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்து திமிராகப் பேசினார்.
இந்த நிலையி்ல தற்போது விவசாய அமைச்சர் நரேந்திர சிங் என்பவர், இந்திய வீரர்களைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நரேந்திர சிங் கூறுகையில், இந்தியப் படையினர் ஐவரை பூன்ச் பகுதியில் கொன்றது பாகிஸ்தான் வீரர்கள் என்று நான் கருதவில்லை. பாகிஸ்தான் நமக்குத் தம்பி. அண்டை நாடு. அது எப்படி நமது வீரர்களைக் கொல்ல முடியும் என்று தண்ணி போட்டு விட்டு பேசுபவர் போல பேசியுள்ளார் சிங்.
சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிங்குக்கு மன நிலை பிறண்டு விட்டது என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர். தனது அமைச்சர்கள் தொடர்ந்து உளறிக் கொட்டி வருவதால் முதல்வர் நிதீஷ் குமார் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.
பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட 5 ராணுவத்தினரில் 4 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.