பிரதமர் பதவிக்கு ஜெ. பொருத்தமானவர்... முகைதீன் பிச்சை சர்வே சொல்கிறது
சென்னை: துபாயில் வசித்து வரும் முகைதீன் பிச்சை என்ற மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகர் நடத்திய இமெயில் சர்வேயில், பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொருத்தமாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.
இமெயில் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தினாராம் முகைதீன் பிச்சை. அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளார்.
அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இலஙகை, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளார் முகைதீன் பிச்சை.
அதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது
ஜெ. - மோடி பொருத்தமானவர்கள்
பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருவருமே பொருத்தமானவர்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.
இருவரும் சிறந்தவர்கள்
மற்ற தலைவர்களை விட இவர்கள்தான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்கள், தகுதியானவர்கள், சிறந்தவர்கள். நாட்டின் தலைமைப் பொறுப்பில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவர்கள்தான் நிரப்ப முடியும், சிறந்த மாற்றாக இருப்பார்கள்.
மன்மோகனை விட ஆற்றல் மிக்கவர் மோடி
பிரதமர் மன்மோகன் சிங்கை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் மோடியிடம் உண்டு. திறமையானவர். மத்தியில் நில்ல நிர்வாகத்தைக் கொடுக்கக் கூடிய திறமை படைத்தவர்.
திறமையான நிர்வாகம் தேவை
இன்றைய சூழலில் நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக அன்னிய நேரடி முதலீடு அவசியம். அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்தியில் திறமையான நிர்வாகம் தேவை. ஆட்சியில் பொறுப்பு உணர்வு வேண்டும்.
தீர்க்கமான உறுதி கொண்டவர் ஜெ.
திறமையான நிர்வாகத்தையும், ஆட்சியில் பொறுப்புணர்வையும் அளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இருக்கிறது. இன்னும் கூடுதலாக ஜெயலலிதா மனத்துணிவும், தீர்க்கமான உறுதியும் கொண்டவர் ஆவார்.
லீ க்வான் யூ மாதிரி
எப்படி லீ க்வான் யூ சிங்கப்பூர் பற்றி தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்தாரோ அத்தகைய தொலைநோக்கு பார்வை ஜெயலலிதாவிடமும் இருக்கிறது.
உற்பத்தியை அதிகரித்துள்ளார் ஜெ.
அவர் 2011-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக 2011-ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உருவாக்கினார். அவரது 2013 தொலைநோக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை 11 சதவீதமாக உயர்த்துவது என்று இருந்தது.
பொருளாதார அறிவு அதிகம்
ஜெயலலிதாவுக்கும், நரேந்திரமோடிக்கும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நல்ல பொருளாதார அறிவு இருக்கிறது. இருவருக்கும் நீண்ட காலம் முதல்வராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
ஜாதி சாரா தலைவர் மோடி
நரேந்திரமோடியை பொருத்தமட்டில் ஜாதி சாரா தலைவராக இருக்கிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திறமை மிக்கவர். நிர்வாகத்திறன் படைத்தவர்.
தனித்துவம் கொண்டவர் ஜெ.
அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா, சில தனித்துவ பண்புகள் கொண்டவர். நிர்வாகத்திறமை, சமூக பிரச்சினைகள் பற்றிய தெளிவு, சிக்கலான விஷயங்களைய உடனே புரிந்துகொள்ளும் அறிவாற்றல் மிக்கவர். ராஜ்ஜியத்திறன், சமூக, பொருளாதார அறிவு, பன்மொழி புலமை. முடிவு எடுக்கும் திறன், புதுமைசிந்தனை, நல்ல கல்விபுலமை, அரசியல் திறமைகள், மக்களின் நலன்பால் உள்ள அக்கறை. இவை எல்லாம் ஜெயலலிதாவின் தனிச்சிறப்புகள் ஆகும்.
ஜெ.வுக்கு 86 - மோடிக்கு 81
பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜெயலலிதாவுக்கு 86 சதவீதம் பேரும், நரேந்திரமோடிக்கு 81 சதவீதம் பேரும், ராகுல்காந்திக்கு 53 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று முகைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.