தேமுதிக நிர்வாகி கம்பம் சின்னமுருகன் கொலை-விஜயகாந்த் கண்டனம்
சென்னை: தேமுதிக பிரமுகர் கம்பம் சின்னமுருகன் கொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சில காலமாக எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்ய முயற்சிப்பதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. தேமுதிகவை சேர்ந்தவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கு்றிப்பாக நேற்று தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் சின்ன முருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாநகராட்சி 18வது வார்டு தேமுதிக கவுன்சிலர் தானேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்போது அவரை வெட்டி கொலை செய்யும் முயற்சியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவங்கள் இரண்டுமே அரசியல் உள் நோக்கத்தோடும், அவர்கள் மக்கள் பணியாற்றுவதை தடுக்கும் விதத்திலும் அரசியல் எதிரிகளால் நடைபெறறு இருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
காவல்துறை என்பது வெறும் ஆளும்கட்சியினருக்கு மட்டும் பாதுகாப்பு தருவதற்காக அல்ல. அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. சட்டத்தின்படி செயல்பட வேண்டிய காவல்துறை எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கப்படும்போது மெத்தனம் காட்டக்கூடாது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
எனவே அரசு இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். மேலும் படுகொலை செய்யப்பட்ட சின்னமுருகன் அவர்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் தானேஸ்வரன் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications