டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த திட்டம்... விலைவாசி விண்ணை முட்டும்!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால், டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது.
இதனால் ஏற்கனவே உச்சத்தில் உள்ள விலைவாசி மேலும் விண்ணை முட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும், லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியது என்பது நினைவிருக்கலாம்.

ஜனவரி முதல்
ஜனவரி மாதம் முதல், அமலுக்கு வந்த திட்டத்தால், டீசலால் ஏற்பட்ட இழப்பு, லிட்டருக்கு, 3 ரூபாய் குறைந்தது.இருப்பினும், ரூபாயின் மதிப்பு சரிந்து வந்ததால், தயாரிப்பு விலைக்கும், சில்லரை விற்பனைக்கும் உள்ள வித்தியாசம், 9.29 ரூபாயாக உள்ளது.

ஏழு மாதங்களில் ஒவ்வொரு முறையும் 50 காசு
கடந்த ஏழு மாதங்களில், ஒவ்வொரு முறையும், 50 காசுகள் மட்டுமே, டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம், 3 ரூபாய் உயர்த்தினால், அதைச் சார்ந்துள்ளள அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

விலைவாசி கிடுகிடுவென உயரும்
இதன் காரணமாக, விலைவாசி, கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது..

ஒரே தடவை உயர்த்த: ஆலோசனை
ஒரே தடவையில், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்ற, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஆலோசனை, அரசின் பரிசீலனையில் உள்ளது; இருப்பினும், எவ்விதமுடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சென்னையில் லிட்டர் ரூ. 54.76
சென்னையில், தற்போது, 1 லிட்டர் டீசல், 54.76 ரூபாயாக உள்ளது. ரூபாய் மதிப்பு குறைவு காரணமாக, ஒரே நேரத்தில் 3 ரூபாய் உயர்த்திய பிறகும்,அதைத் தொடர்ந்து விலை உயர்வு இருக்காது என்று முடிவுக்கு வர முடியாது; மாதந்தோறும் லிட்டருக்கு, 50 காசுகளோ, அதற்கு மேலுமோ, உயர்த்துவது தொடரும்.

லாரி வாடகை உயரும்.. காய்கறி விலை உயரும்
இதன் காரணமாக, லாரி வாடகை கட்டணங்கள் உயரும்; இதனால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கலாம்.

கூட்டம் முடிந்ததும்
எனவே இம்மாதம் இறுதியில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், விலை உயர்வு பற்றிய அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications