லோக்சபா தேர்தல்: காங். அணி 122 தொகுதிகளை இழக்குமாம்!! 3வது அணிக்கு அமோக ஆதரவு!!
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா டுடே மற்றும் சி வோட்டர்:
தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்:

காங்கிரஸ் அணிக்கு 137 மட்டுமே!
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக்குமாம்.

2009-ம் ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி?:
கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 259 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் தற்போது இதில் 122 தொகுதிகளை இழக்க நேரிடுமாம்.

பாஜக கூட்டணியும் 4 இடங்களை இழக்கும்:
2009ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4 தொகுதிகளைத்தான் இழக்க நேரிடுமாம்.

மூன்றாவது அணியே ஆட்சி:
ஆனால் கடந்த தேர்தலில் இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் 125 தொகுதிகளைத்தான் பெற்றிருந்தன. இம்முறையோ கூடுதலாக 126 தொகுதிகளைப் பெற்று 251 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடுமாம்.
இதனால் 3வது அணி அமைந்து காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவுடன் ஆட்சி ஒன்றை அமைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications