ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் தங்கம் விலை உயர்ந்தது ஏன்?: சீனாவும் ஒரு காரணமா?
மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததையடுத்து டாலருக்கு இணையாகப் பார்க்கப்படும் தங்கத்தின் விலை தடாலடியாக கிராமுக்கு ரூ. 131 அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே நாளில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்தது இல்லை. கடைசியாக 2011ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 19ம் தேதி, இதே அளவான ரூ. 131 அதிகரித்து பின்னர் மீண்டும் தங்கத்தின் விலை சரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டாலர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தங்கத்தை இறக்குமதி செய்யவே நமது நாட்டின் அன்னிய செலாவணியில் (டாலர்கள்) பெரும் பகுதி செலவிடப்படுவதால், அதைத் தடுக்க தங்கம் இறக்குமதி மீது கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
தங்கம் இறக்குமதி மீதான வரி 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் இறக்குமதி குறையும், அன்னிய செலாவணியான டாலர்கள் மிஞ்சும், இதனால் ரூபாயின் மதிப்பு உயரும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கணக்குப் போட்டார்.
ஆனால், டாலர்களுக்கு தட்டுப்பாடு விலகாத நிலையில் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து கொண்டே இருப்பதால், டாலருக்கு இணையான (டாலர்களில் வெளியிடப்படும் அமெரிக்க பங்குகள்) முதலீடாகக் கருதப்படும் தங்கத்துக்கும் கடும் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது.
தங்கத்தோடு சேர்த்து வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 3,270 அதிகரித்து ரூ. 49,320த்தைத் தொட்டுள்ளது.
மேலும் இந்த தங்கப் பிரச்சனைக்கு சீனாவும் ஒரு காரணம். கடந்த ஒரு வாரத்தில் சீனாவின் தங்கம் இறக்குமதி பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனால் உலகளவில் தங்கத்துக்கு பெரும் டிமாண்ட் உருவாக, விலையும் அதிகரித்துவிட்டது.