பெரியகுளத்தில் ரூ.13.54 கோடியில் நர்ஸிங் கல்லூரி: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டம், தேனி மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள பெரியகுளத்தில் இந்த கல்வியாண்டு முதல் புதியதாக செவிலியர் கல்லூரி ஒன்று துவங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இக்கல்லூரி 50 மாணவ, மாணவியர் சேர்க்கையுடன் துவக்கப்படும். இக்கல்லூரியில் பணியாற்ற முதல்வர் பதவி 1, துணை முதல்வர் பதவி 1, விரிவுரையாளர் 1, ஆசிரியர் 5, செவிலியர் ட்யூட்டர் நிலை 2 - 16, நூலகர் 1, நிர்வாக அலுவலர் 1, அலுவலகக் கண்காணிப்பாளர் 1, உதவியாளர் 1, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 1, காவலர் 2, காப்பாளர் 1, சுகாதாரப் பணியாளர் 2 என 34 பணியிடங்களை தோற்றுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களின் சம்பளம், எரிபொருள், உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் சில்லரை செலவினங்களுக்காக தொடர் செலவினமாக ரூபாய் 2.15 கோடியும், தொடரா செலவினமாக இக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடம் கட்டுதல் மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 8.99 கோடியும், உபகரணங்கள், அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள், பத்திரிக்கைகள், எழுதுபொருள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக ரூபாய் 2.40 கோடியும் என மொத்தம் ரூபாய் 13.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசரப் பிரிவு, மகப்பேறுப் பிரிவு மற்றும் பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் புற ஆதார முறையில், 8 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் பணி செய்ய, 286 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 868 காவல் பணியாளர்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications