பில்லி சூனிய, மூடநம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டத்தை பிறப்பித்தது மகாராஷ்டிரா!
மும்பை: பகுத்தறிவாளர் தாபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து போராடி வந்த பில்லி சூனியம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்து அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தாபோல்கர் சீரிய பகுத்தறிவுவாதி. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்தவர். அவர் புனே நகரில் காலையில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு மகாராஷ்டிரா அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று கூடிய மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, சடங்குகள், மூட நம்பிக்கைகள், பில்லி சூனியம் ஆகிய அனைத்துமே தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சட்டம் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் நிலையிலேயே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.