சமையல் காஸ் உள்ளிட்ட மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம் அல்ல
சமையல் கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதை பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்காக, வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று கெடுபிடி செய்யப்படுகிறது.
கேரளாவில் சமையல் காஸ் மானியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கை கொடுக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. யான அச்சுதன் இப்பிரச்னையை கிளப்பினார். பாரதீயஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இதே குற்றச்சாட்டை கூறினர்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா அளித்த பதிலில், ‘‘சமையல் காஸ் உட்பட மத்திய அரசு வழங்கும் எந்த மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது'' என்று கூறியுள்ளார்.