சொத்து தகராறு: விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்துத்தகராறில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 58). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இன்று காலை 9 மணியளவில் ஆசைத்தம்பி அந்த பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் உள்ள கடைத்தெருவுக்கு சென்று நண்பர்களுடன் பேசிவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
வீட்டின் அருகில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதையடுத்து ஆசைத்தம்பி மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து அறிந்ததும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ராதாபுரத்தில் திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஆசைதம்பிக்கும், அவரது தம்பி ஒளிவண்ணன் (50) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் ஆசைத்தம்பிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒளிவண்ணன் கூலிப்பை,டயை ஏவி ஆசைத்தம்பியை வெட்டி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ஆசைத்தம்பிக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.