சீனாவை தொடர்ந்து எல்லையில் மியான்மர் ராணுவம் ஊடுருவல்!: தாரைவார்க்கப்படும் இந்திய கிராமம்!!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான், லடாக் பிராந்தியத்தில் சீனா, அருணாசலப் பிரதேசத்தில் சீனா, இலங்கை வழியே தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் என ஒவ்வொரு நாடும் குடைச்சல் கொடுத்து வருகிறது. இதில் இப்போது மியான்மரும் இணைந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தின் எல்லை நகரான தமிழர்கள் வாழும் மோரேவையொட்டிய ஹொலென்பை கிராமத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முகாம் அமைக்க மியான்மர் ராணுவம் முயற்சித்தது. இதனால் இந்திய பகுதிக்குள் ஊடுருவி மரங்களை வெட்டிப் போட்டது மியான்மர் ராணுவம்.
இதைத் தொடர்ந்து அசாம் ரைபிள்ஸ் படையினர் மியான்மர் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் மோரே நகரம் உள்ளிட்ட இந்திய எல்லைகளை ஆக்கிரமித்து வேலி அமைக்கும் நடவடிக்கையில் மியான்மர் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே மியான்மர்- இந்தியா இடையேயான மோரே எல்லை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் உக்ருல் மாவட்டத்தின் சரோ ஹூனுவோ கிராமத்தையே மியான்மருக்கு தாரை வார்க்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதற்கு உக்ருல் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் ஆளுநர் அஸ்வனிகுமார் நாளை மோரே நகருக்கு சென்று எல்லை நிலைமைகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
எல்லையோர மியான்மர் ஊடுருவலால் மோரே தமிழர்கள் மட்டுமின்றி மணிப்பூர் எல்லையோர கிராம மக்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.