பொருளாதாரத்தை சரி செய்ய முன்கூட்டியே லோக்சபாவுக்கு தேர்தல்: எல்.கே. அத்வானி!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமது கட்சித் தலைவர்களுடன் எல்.கே.அத்வானி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தற்போதைய அரசு தடுமாறி வருகிறது. பேசாத பிரதமர், தனக்கு மேல் உள்ளவர்கள், முன்னே இருந்த பழைய அமைச்சர்களைக் குறை சொல்லித் தப்பிக்கும் நிதி அமைச்சர், தன்னை பொறுப்பாளி ஆக்கிக் கொள்ளாத மூத்த தலைவர், நாட்டின் நிலையைச் சமாளிக்க நிதி எங்கிருந்து வரப்போகிறது என்ற தெளிவான சிந்தனை அறியாத அதிகார வர்க்கம் எல்லாம் சேர்ந்து கொண்டு நாட்டின் இயல்பை முடக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது.
எனவே, இந்த அரசு தங்களது நிதிக் கொள்கை உள்ளிட்ட செயல் கொள்கைகளை உடனடியாக மாற்றிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும். அடுத்த 3 மாதங்களில் தேர்தல் கால நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் அதற்கு முன்னதாக அரசு செயல்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே. அத்வானி, நாட்டில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையையும், பொருளாதாரம் பின்னடைவையும் சரிசெய்ய வேண்டுமானால் அதற்கு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவது உதவியாக இருக்கும்.
தற்போதே தேர்தல் நடத்தினால், புதிய அரசைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பினைத் தந்து அதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்க வழி ஏற்படுத்தும் விதமாக அமையும் என்றார்.