கச்சத்தீவை மீட்க முடியாது.. இலங்கை எல்லைக்குட்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்!!
டெல்லி: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் கூறியுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதி கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையின் போது கச்சத்தீவு, இலங்கை எல்லைகுட்பட்ட பகுதி. அதனால் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications