ரூபாய் மதிப்பு வீழ்ந்தாலும் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக இருக்கிறது: மன்மோகன்சிங்
டெல்லி: நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வெளிநாட்டு காரணிகளே காரணம் என்றும் இந்தியா பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவானதாகவே இருக்கிறது என்றும் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்திருக்கிறார்.
ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சில சர்வதேச விளைவுகளால் அசாதாரண நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதிலிருந்து மீள நமக்கு சில காலம் ஆகும். இந்த விவகாரம் குறித்து நாளை விளக்கம் அளிக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று லோக்ச்பாஅவில் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய மன்மோகன்சிங்,
நியாயமான கவலைதான்..
நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பான எம்.பிக்களின் கவலை நியாயமானதே.. கடந்த மே மாதத்துக்குப் பின்னர்தான் ரூபாய் மதிப்பு திடீர் சரிவை எதிர்கொண்டிருக்கிறது.
அமெரிக்காதான் முதன்மை காரணம்
அமெரிக்கவில் பொருளாதார சரிவை சமாளிக்க நிதி உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நிதி உதவி திட்டங்களை அமெரிக்க மத்திய வங்கி திருமப் பெற்றது. இதனால் வளரும் நாடுகளில் இருந்து மூலதனம் வெளியேறியது. இத்தகைய வெளியேற்றத்தால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொண்டது.
நமக்கு மட்டுமல்ல..
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, பிரேசில், துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பும் கூட சரிந்து போயுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை..
நடப்பு கணக்கு பற்றாக்குறையை 4.8%க்குள் வைத்திருக்க என்னவெல்லாம் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அவையெல்லாமே மேற்கொள்ளப்படும்.
ஆர்.பி.ஐ. நடவடிக்கை
பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்
வலுவான பொருளாதார அடித்தளம்
நமது நாட்டின் பொருளாதார அடித்தளம் என்பது மிகவும் வலுவானதாகவே இருக்கிறது. இதனால் தற்போதைய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப் போவதில்லை
அனைத்துக் கட்சிகளுக்கு வேண்டுகோள்
நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குக்கு கொண்டுவருவதில் அனைத்துக் கட்சிகளும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.