பிறந்த நாள் பரிசு வழக்கு - 3 வாரங்களில் பதிலளிக்க ஜெ.வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாள் பரிசாக ரூ. 2.09 கோடிக்கு காசோலகள் வந்தன. இவற்றை முறைப்படி அரசிடம் ஒப்படைக்காமல் அவரே வைத்துக் கொண்டதாக கூறி பின்னர் 1996ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசால் வழக்கு தொடரப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா தவிர அப்போதைய அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் அழகு திருநாவுக்கரசு பின்னர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.
இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. கடந்த 14 வருடங்களுக்கு மேலாக இது இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிதான் இதில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.
ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளிக்க அவகாசம் கோரி ஜெயலலிதா தரப்பி்ல் முறையிடப்பட்டது. அதை ஏற்ற கோர்ட், இவ்வழக்கில் பதிலளிக்க 3 வாரங்கள் அளித்து உத்தரவிட்டுள்ளது.