28 தலித் வீடுகள் இடிப்பு: சிவகங்கை தாசில்தார், ஆர்.ஐ சஸ்பெண்ட்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பாப்பான்குளத்தில் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பாக வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிறுகுடி ஊராட்சி, பாப்பாங்குளம் கிராமத்தில், ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து, கட்டியிருந்ததாக, 28 வீடுகள் இடிக்கப்பட்டன. ஆகஸ்ட் 15ம் தேதி அன்று தொடங்கி மூன்று தினங்கள் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சிறுகுடி ஊராட்சி பெண் தலைவர், அம்சவள்ளியின் கணவர் தங்கராஜ் ஏற்பாட்டில் தான், இந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
போலீசார் பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், ஒய்வு பெற்ற நிலஅளவை அதிகாரி ஆகியோர் சேர்ந்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 28 வீடுகள் இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 15ல் இடிக்கப்பட்ட பிரச்சனை ஆகஸ்ட் 20ல் பெரும் திரள் போராட்டத்திற்கு பின்பு உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் 16 உயர் அதிகாரிகள் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாப்பாங்குளம் கிராமத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். வீடுகளை இழத்த தலித் மக்களுக்கு தலா 5லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், இடிபட்ட வீடுகளுக்கு பதிலாக அரசே வீடு கட்டி தரவேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சிவகங்கை வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.