தூத்துக்குடி: சத்துணவுப் பணியாளர்கள் சாலை மறியல் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கருப்பு உடையணிந்து தூத்துக்குடி-பாளை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 300க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், உணவுமான்ய செலவினை உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சமையல் உதவியாளர்களை சமையல் உதவியாளர்களாக பணிஉயர்வு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் இன்று சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி தலைமையில் கருப்பு உடையணிந்து வந்த சத்துணவு பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து சத்துணவு பணியாளர்கள் தூத்துக்குடி -பாளை ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்களை மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜோசப்ஜெட்சன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு பணியாளர்களின் சாலைமறியல் போராட்டத்தால் தூத்துக்குடி-பாளை ரோட்டில் சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
அதேபோல, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
மாநில செயலாளர் ஜேம்ஸ்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்ற ஆசிரியர்கள் 300பேரை புதுக்கோட்டை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.